கடல் தீர்த்தம் எடுத்து கல்யாணக்கால் முறித்தலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்கு
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு உணர்வு பூர்வமாக பாரம்பரியமான கடல் தீர்த்தம் எடுத்து கல்யாணக்கால் முறித்தலுடன் நேற்று( 2) ஆம் திகதி திங்கட்கிழமை மாலை ஆரம்பமாகியது.
ஆலயதர்மகர்த்தார்களான இரா.குணசிங்கம் எஸ்.நமசிவாயம் சா.கனகசபேசன் , கப்புகன்மார் மற்றும் ஆலய பிரதிநிதிகள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடல் தீர்த்தம் எடுத்து வரும் வழியில் கல்யாணக்கால்( பூவரசு மரக்கிளை) முறித்து அதனை நடைபாவாடை விரித்து ஆலயத்திற்கு கொணர்ந்து பாரம்பரிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்து பெண்கள் பட்டுச் சேலைகளை நேர்த்தி செய்து அரோஹரா கோசம் முழங்க கல்யாணக்கால் நடப்பட்டது.
பின்னர் பக்தர்கள் பலகாரம் தொடக்கம் மணத் தாம்பூலம் வரை படைத்து வழிபட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிந்தனர்.
இவ்வாறு மரபு வழியாக நேற்று மாலை ஆரம்பமாகிய திருக்குளிர்த்தி சடங்கு 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய இருக்கிறது .
அதனையொட்டி பிரதான வீதி மற்றும் ஆலய சூழல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.










