அம்பாறையிலே நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும். எமது மக்கள் 2020ல் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒருக்கீட்டின் மூலம் மல்வத்தை திருவள்ளுவர்புரம் கலைமகள் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிடம். அமைப்பதற்காக 20இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்படி வேலைத்திட்ட அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பினும் ஆளுந்தரப்பு அல்ல. எமது மக்களின் பிரச்சனைகளை எங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட இடங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது இனம் மிக மோசமாகப் பதிக்கப்பட்டடிருக்கின்றது. உயிர் ரீதியான, உடமை ரீதியான இழப்புகள் என பல்வேறு பட்ட இழப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆகையால் நாங்கள் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் எம்மால் முடிந்தளவு எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றோம்.

நாங்கள் இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு எமது சமூக ரீதியாக பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஒரு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதி என்ற அடிப்படையில்
எமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அநீதிகள் தொடர்பில் நாங்கள் பேசியே ஆக வேண்டும்.

கடந்த சில காலங்களாக அம்பாறை மாவட்டத்திலே பல முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டமென்பது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் இதனை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால் எமது தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகள், அடக்குறைகள், வெளியேற்றப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாங்கள் அக்கறையோடு இருந்து செயற்படுகின்றோம்.

ஏனெனில் இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் இந்த மண்ணிலே வழ்வதற்கும் சகல பலாபலன்களையும் அனுபவிப்பதற்கும் உரித்துடையவர்கள். அவ்வாறு உரித்துடைய ஒரு இனம் இனரீதியாக ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தின் பாதிப்பினை அனுபவித்துக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் தற்போது வந்து ஒரு சந்தர்ப்பம் கேட்டு நாங்கள் வழவைப்போம், அபிவிருத்தி தருகின்றோம் என்ற கோசங்களையெல்லாம் எழுப்பித் திரிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுகுறித்து நான் மிகவும் வேதனை தான் அடைகின்றேன். நானும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு எல்லைக் கிராமத்தில் இருந்து வந்தவனே. 2008ம் ஆண்டு இந்த நாட்டிலே கிழக்கு மாகாணசபை பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரலாறுகளையும் அனைவரும் அறிவோம். 2008ம் ஆண்டு காலப்பகுதியிலே நான் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளராக இருந்த போதும் கூட எமது நாவிதன்வெளி பிரதேசத்தின் பிரச்சனைகள் தொடர்பில் அப்போது மாகாணசபையில் இருந்தவர்களிடம் முறையிட்டும் எவ்விதமான அபிவிருத்தியும் நடைபெறவில்லை. அதேபோன்று மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் இந்த மாகாணத்தை ஆண்ட முதலமைச்சரிடம் பல விடயங்கள எடுத்துரைத்தோம். எதுவுமே நடைபெறவில்லை.

ஆனால் தற்போது யுத்தம் மௌனிக்கப்பட்ட அந்த சாதக பாதகங்களை வைத்துக் கொண்டு எம்மை கபளீகரம் செய்து தொடர்ச்சியாக இந்த நாட்டில் கையேந்தும் இனமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில அரசியல்வாதிகள் செய்யும் செயற்பாடுகள் மனவேதனைக்குரியது.

நாங்கள் இந்த நாட்டில் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல எமது மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆதங்கத்தோடு, ஒரு நியதியோடு நாங்கள் செயற்படுகின்றோம். இந்த அரசாங்கமாக இருந்தாலும் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களாக இருந்தாலும் சரி தமிழ்த் தேசியம் என்று சொல்லுகின்ற கட்சியை இந்த நாட்டில் இருந்து இல்லாமல் செய்து அவர்கள் ஆக்கிரமிப்பையும், எந்த அநீதியையும் எதிர்த்து யாரும் குரல்காடுக்க முடியாத சூழலை உருவாக்கி அவர்கள் நினைத்த விடயங்களை கையாளலாம் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சனை, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசுகின்றார் நாங்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் செயற்பாட்டளவில் ஒரு சில சிறு சிறு விடயங்களை அவர் முன்னெடுத்திருந்தாலும், தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனை மற்றும் 13வது திருத்தம் தொடர்பில் செயற்பாட்டளவில் எதுவுமே நடக்கவிவ்லை. ஆனாலும் நடக்கவில்லை என்பதற்காக நாங்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்க முடியாது. நாங்கள் பாதிப்புற்ற இனம், போராட்டம் என்றால் இதுதான் என இந்த உலகத்திற்கே காட்டிய ஒரு இனத்திலிருந்து வந்த நாங்கள் இந்த நாட்டிலே எமது மொழி கலை கலாச்சரம் என்ற ரீதியில் எமது மக்களைப் பாதுகாத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருககின்றோம்.

நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பேசும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது இனம் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். இவ்வாறானவர்களிடமிருந்து எமது இனத்தை காப்பற்ற வேண்டிய பொறுப்பு எமது இளைஞர்களுக்கு இருக்கின்றது. எது எமக்கு நேர்த்தியான அரசியல் எமது மக்களையும், இருப்பையும் காப்பாற்றும் அரசியல் என்பதை இளைஞர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

2020ம் ஆண்டு எமது மக்கள் கையாண்ட ஒவ்வெரு விடயமும் இந்த நாட்டில் எமது மக்களின் பிரச்சனை தொடர்பில் எம்மைக் கையாள முடியாதவர்களாக ஆக்கி விட்டார்கள். கடந்த பொதுத் தேர்தலில் தனது சொந்த மாவட்டத்தில் கூட எதனையும் செய்ய முடியாத அரசியல்வாதியொருவர் அம்பாறை மாவட்டத்தில் இனரீதியான கருத்துக்களைச் சொல்லி மக்களைக் கவர்சந்து வாக்குகளைப் பெற்று இந்த மக்களையும் மண்ணையும் அநாதைகளாக்கிய விடயத்தை அனைவரும் அறிவோம்.

இந்த மாவட்டத்திலே எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கக்கூடிய எந்த அரசியற் கட்சியாக இருந்தாலும் அதற்கே எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏற்படுத்தப்பட்ட அநீதிகளை எமது மாவட்டத்தில் எல்லைக் கிராமத்து மக்களே அதிகம் அனுபவித்திருப்பார்கள். இற்றைவரைக்கும் அவர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் இல்லை. எனவே எமது மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த விடயங்களையும் மறந்துவிடக் கூடாது.

நாங்களும் சொல்லுகின்றோம் எமக்கு அபிவிருத்தி வேண்டும். அதே நேரம் எமது இருப்புகளும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்றும் நாங்கள் செயற்படுகின்றோம். இந்த நாட்டின் பெரும்பான்மை அரசியற் தலைவர்கள் எமது மக்களின் இருப்பு, தீர்வு தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடி எதிர்க முன்வருவார்களாயின் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. எங்களை ஏமாற்றி அடக்கி ஆள வேண்டும் என்ற சிந்தனையோடே அவர்கள் இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட அவ்வாறான ஏமாற்றங்களை அனுபவித்தத்தன் விளைவாகவே இறுக்கமான சில கொள்கைகளோடு நாங்கள் தற்போது பயணிக்கின்றோம். அதற்கு எமது மக்கள் தான் எம்மோடு பலமாக இருக்க வேண்டும்.