ஊடக  போட்டிகளால் சாட்சிகளின் நம்பகத்தன்மை-சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில் ஆஜரான   சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில்

பாறுக் ஷிஹான்

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும்  14 நாட்கள்  விளக்கமறியலில்  எதிர்வரும் ஜனவரி  மாதம் 18 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு   வியாழக்கிழமை (04)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின்  சமர்ப்பணங்கள் மற்றும் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதன் போது பாதிக்கபட்ட சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில் ஆஜரான   சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புபட்ட சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்துக்களை கூறுவதால் வழக்குத்தொடுப்பு தரப்பிற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கி கூறியதோடு  இவ்வாறான ஊடக  போட்டிகளால் சாட்சிகளின் நம்பகத்தன்மை வழக்கு நடவடிக்கையின் போது கேள்விக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால்  இவ்வழக்கு  முடியும் வரை இந்த வழக்குகளோடு தொடர்பற்ற நேரடி சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடை செய்யும் முகமாக ஒரு கட்டளையை தாக்குமாறு நீதிமன்றினை கோரியிருந்தார்.இதனை கருத்தில் கொண்ட நீதிவான் சாய்ந்தமருது பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகளை பெற்று மன்றிற்கு அறிக்கை சமரப்பிக்க  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக  சிரேஸ்ட சட்டத்தரணி எப்.எம்.ஏ அன்சார் மௌலானா சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் சவுத் முஹமட் ஆஜராகி இருந்தனர்.சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி  ஏ.எல்.எம். றிபாஸ்  பிரசன்னமாகி இருந்தார்.

குறித்த வழக்கினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்சுதீன்  நெறிப்படுத்துதலின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர் முபாறக் நெறிப்படுத்தி இருந்தார்.அத்துடன் இம்முறை  குறித்த வழக்கு ஆரம்பம் முதல் நிறைவடையும் வரை மரணமடைந்த சிறுவனின் குடும்பத்தினருடன்  சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும்  ஜம்மியதுல் உலமா சபையினர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதே வேளை இன்று சந்தேக நபரான மௌலவிக்கு மற்றுமொரு  மாணவனை கொடூரமாக  தாக்குதல் மேற்கொண்டு  காயப்படுத்திய சம்பவம் தொடர்பான   மற்றுமொரு வழக்கும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 

13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த செவ்வாய்க்கிழமை (5)   மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது  சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை(2)  அன்று  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.