புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் – புள்ளி விபர மதிப்பீடு இடை நிறுத்தம்!

புள்ளிவிபரவியல் திணைக்களத்தனால் மக்களது புள்ளி விபரங்கள் தற்போது பிரதேச செயலக வாரியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (12) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் புள்ளி விபரங்கள் சேகரிக்கும் போது மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாத கல்முனை பிரதேச மக்கள் நீதி கோரி இன்று காலை மழைக்கு மத்தியில் வீதியிலிறங்கினர்.

தமிழ் இளைஞர்சேனையும் ஏனைய பொது அமைப்புகளும் இவ்வாறான தொடர்ச்சியான சூழ்ச்சிகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

புள்ளி விபர மதீப்பீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆவணம் முறையான முறையில் சீர் செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணி இடம் பெறுவதுக்கு நாம் எதிர்ப்பில்லை என மக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?

தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் எதிர்வரும் வாரத்தில் ஆலம்பிக்கபடவிருப்பதாக தெரியவருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க வேலைகள் மற்றும் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டமையினால் இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துவந்தன. இருப்பினும் எதிர்வரும் வாரத்தில் இவை ஆரம்பிக்கப்படலாமென தெரியவருகின்றது.

கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க பயிற்சிகளின்போது புள்ளிவிபர திணைக்களத்தால் வழங்கப்பட்ட கிராம அலுவர் பிரிவுகளுக்கான நில அளவைத் திணைக்களத் தகவல்கள் அவ்வவ் கிராம சேவகர் பிரிவுகளின் உண்மைத் தன்மைகளை பிரதிபலிக்காமையினால் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட்ட உத்தியோகத்தர்கள் தங்களது ஆட்சேபங்களை தெரிவித்து இக்கடமைகளில் இருந்து விலகியிருந்தனர். தற்போது இவ்விடங்களில் குறிபிடத்தக்களவு சீர்செய்யப்பட்டுள்ளமையினால் தகவல் திரட்டும் நடவடிக்கைகள் தொடருமென எதிர்பார்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இன்னும் குறிப்பிட்ட கிராம சேவகர் பிரிவுகள் உள்ளவாறாக இற்றைப்படுத்தப்படவில்லை எனவும் புள்ளிவிபர திணைக்களத்தால் போலியான நில அளவை படங்களே தயார்செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும், அது மட்டுமன்றி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு தனியான பிரதேச செயலாளர் பிரிவாக புள்ளிவிபர திணைக்களத்தால் வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு பிரதேச செயலகப் பிரிவை ஒரு உப பிரதேச செயலாளர் பிரிவாக கணக்கெடுப்பை நடத்த திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துதெரிவிக்கையில் புள்ளிவிபர திணைக்களத்தின் இச்செயற்பாடுகள் எமது மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு எனவும் எமது பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவத்தில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வரைபடத்தை சீர்செய்து இந்நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.