மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு!

அபு அலா

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் (19) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதியாக கலந்து கொண்டு குறித்த உத்தியோகத்தர்களுக்கான பதவியுயர்வு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்தப் பதவியுயர்வு நியமனங்களை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 07 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 07 பேரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேரும் பெற்றுக்கொண்டனர். இதில் ஆண் மர்த்தனர் 12 பேரும், பெண் மர்த்தனர் 05 பேரும் இப்பதவியுயர்வை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவியுயர்வு நியமனம் தொடர்பில், கடந்த காலங்களில் இருந்த 3 ஆளுநர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இவ்விடயம் முன்னெடுக்கப்படாமல் இருந்தமையும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

இந்நிகழ்வில் கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர்கள், சுதேச மருத்துவத் திணைக்கள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

You missed