(ம.கிரிசாந்)

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம்.

கண்ணகி கிராம பகுதியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்துவருவதுடன் குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான குடும்பபெண் ஒருவர் உயிரிழந்து கிராம மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் குறித்த காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்கள், பயிர் நிலங்கள் என பலவற்றை தொடர்ந்தும் சேதப்படுத்தி வருகின்றது.

மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென வீட்டிற்குள் நுழைகின்ற காட்டுயானையினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அத்துடன் ஊருக்குள் நுழைந்து தொடர் அட்டகாசம் செய்து வருவதினால் இரவு வேளையில் மக்கள் நித்திரையின்றி பயத்துடன் விழித்திருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

இதனால் சிறுவர்கள், கற்பினி தாய்மார், முதியோர் என பலர் பயத்தில் பல்வேறு உடல் உள உபாதைகளுக்குள்ளாகியும் வருகின்றனர்.

இவ்வாறான பல பாதிப்பான விடயங்கள் இடம்பெற்று வருகின்றதுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.