(எம்.எம்.அஸ்லம்)

பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகளின் கூக்குரலுக்கு அஞ்சி, தமது கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்ட சில கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் சமூதாயத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தி நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்வதன் மூலமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (31) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அப்துல் மஜீத் மேலும் கூறியதாவது 1994ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய 6 முஸ்லிம் பிரதேச சபைகளில் ஒன்றிலேனும் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் என்று தலைவர் அஷ்ரஃப் பகிரங்க அறிவிப்பு செய்திருந்தார்.

தேர்தல் முடிவுகளின் படி 265 வாக்குகளால் நிந்தவூர் பிரதேச சபையும் 92 வாக்குகளால் பொத்துவில் பிரதேச சபையும் தோற்கடிக்கப்பட்டதனால் எத்தகைய சலனமும் இன்றி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து கனவான் அரசியலுக்கு பெருந்தலைவர் அஷ்ரஃப் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சியில் இருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்த பெருமை முஸ்லிம் காங்கிரஸையே சாரும்.

1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அதே வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் சந்திரிக்கா அம்மையாரை ஆட்சிக்கு கொண்டு வர முஸ்லிம் காங்கிரஸ் உதவியது.

அப்போது சந்திரிக்கா- அஷ்ரஃப் ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக அமைந்திருந்தது.

அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றியும் தலைவர் அஷ்ரஃபின் அரசியல் ஆளுமை பற்றியும் சிலாகித்துப் பேசியிருந்தார்.

மட்டுமன்றி தென்கிழக்கு என்ற வார்த்தை பிரயோகத்தை பல தடவைகள் பயன்படுத்தி இருந்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் போது தென்கிழக்கு மாகாண சபை ஒன்று நிறுவப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை முன்கொண்டு செல்லப்படுகின்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பது அதன் மையப் புள்ளியாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர் முஸ்லிம் காங்கிரஸ் என்பதை என்னால் துணிவுடன் எடுத்துச் சொல்ல முடியும்.

கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம், மன்னார் மாவட்டம் உட்பட கிழக்கில் பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் இழந்து நிற்கின்ற காணிப் பிரச்சனைகள் தொடர்பாகவும், முஸ்லிம் மக்களின் வாழ்விடம் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இண அடையாளம் கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற குரல் பௌத்த சிங்கள கடும்போக்கு வாதிகளால் முன்வைக்கப்பட்டது.

அவர்களின் கூக்குரலில் அச்சம் கொண்ட எம்மவரின் சில கட்சிகள், தமது கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்டன.

இவர்களை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும்? முஸ்லிம் சமூதாயத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தி நிற்கும் முஸ்லிம் காங்கிரஸை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்- என்று அப்துல் மஜீட் மேலும் குறிப்பிட்டார்.