உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது மற்றும் இரண்டாவது குறைநிரப்பு பட்டியலுக்கு அமைய, வாக்காளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98 ஆவது சரத்தின் 08 ஆவது உபசரத்திற்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானியை வௌியிடவும் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.