“சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு
நாம் இனி கட்டுப்பட மாட்டோம்”
**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு

சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம் என்ற சிறீதரனின் கருத்தை நான்  ஆதரிக்கிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவர் சட்டத்தரணி தவராஜா தெரிவித்தார்.

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கூறிய விடயத்தை நான் முற்று முழுதாக ஏற்கின்றேன் என பிரபல சட்டத்தரணியும், இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவருமான தவராஜா தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர், 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை, தொடர்ச்சியாக நான் கூறிக்கொண்டு வருகிறேன். கட்சி என்று கூறும் போது கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட,கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும்கேட்கப்பட வேண்டும்.அல்லது மத்திய குழுவில் உள்ள பாராளுமன்ற குழுவாக இருந்தால் கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.
அந்த முடிவு ஒரு குழுவான முடிவாக இருக்க வேண்டும்.இது தொடர்ச்சியாக நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன்.

தமிழரசு கட்சி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு என்பதற்கு காரணம் எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவினை எடுப்பதாகும். தமிழ் அரசு கட்சி நிலைத்து நிற்கும் ஸ்ரீதரன் அவர்கள் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்னவென்றால் ஒரு முடிவினை எடுக்கும் போது ஒரு பாராளுமன்றத்திலே ஆதரிப்பதா? இல்லையா?என்பதை முடிவினை எடுத்து அதில் பெரும்பாலும் எடுக்கும்முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற குழுவில் அவ்வாறு முடிவு வரவில்லை.
ஆனால் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆதரிப்பதா இல்லையா என்ற நிலைப்பாட்டில் இருந்து அதிலிருந்து அவர் வாக்களிக்காமல் வெளியேறு சென்று விட்டார்.ஆனால் இதே சுமந்திரன் ஒரு கட்டத்திலே கூறியிருந்தார் யாராவது வாக்களிக்காமல் செல்வார்களாக இருந்தால் புறக்கணிப்பவர்களாக இருந்தால்,அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறி இருந்தார். ஆனால் அன்றைய செயற்பாட்டை பார்க்கும்போது அப்படி கூறிய சுமந்திரன் அவர்கள் எதிர்த்து வாக்களிக்கவும் இல்லை. முதுகெலும்பில்லாதவர்போல செயல்பட்டு இருக்கின்றார்.
இந்த விடயத்தை தான் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகின்றேன். ஒரு கட்டுக்கோப்பிற்காக ஒரு கட்சிக்குள்ளே ஒரு தலைமைத்துவத்தினுடைய முடிவாக இருந்தால் கூட, அனைவரும் ஒருங்கிணைப்போடு எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு தமிழ் தேசிய அரசியலை கொண்டு நடத்த வேண்டும். இங்கே அவ்வாறு இல்லை.தேசிய அரசியலில் காட்டும் பங்கில் ஒரு பங்கை கூட தமிழ் தேசிய அரசியலைநடாத்துவதில் காட்டப்படுவதில்லை. ஆகவே இந்த விடயம் மாற்றம் அடைய வேண்டும். மாற்றம் அடையாவிட்டால் நிச்சயமாக தமிழரசு கட்சி வீழ்ச்சி பாதைக்கு போய்க்கொண்டிருக்கின்றது அதை இறுதிக்கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலைஏற்படும்,

இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் கம்பனியல்ல. மக்களின் கட்சி.  மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம். இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது 

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளனர்.ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உயர் நீதி அரசராக இருந்த சி. வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்று இருக்கின்றார்கள்.ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால்  பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது.அதாவது,தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது. இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது   கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.