இலங்கையின் விவசாய உற்பத்தியில் பெரும்பங்காற்றும் கிழக்கு மாகாணம் அதனுடன் இணைந்து தொழில்வாண்மையுள்ள இளம் வயதினரையும் உருவாக்குவதில் முன்னிற்கிறது.

இதன் ஓர் மைல் கல்லாக 41 வருடங்களாக உயர்கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது. 132 மாணவர்களுடன் ஒரு வருட பன்முக கற்றலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

கிழக்கு பல்கழலைக்கழகத்தின் நல்லையா கேட்ப்போர்கூடத்தில், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகிரதன், வெளிவாரி கற்கைகள் மையத்தின் இயக்குனர் கலாநிதி ரீ.பிரபாகரன், விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.பக்திநாதன், கற்கை நெறியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.எஸ்.அமுதினி, விவசாய உயிரியல் துறை தலைவர் கலாநிதி ஆர்.நிரஞ்சனா ஆகியோருடன் பதில் பதிவாளர்களும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களை வரவேற்று உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், எமது கிழக்கு பிரதேசமானது விவசாய தன்னிறைவுடன் வாழ்ந்த சமூக பாரம்பரியத்தை கொண்டதெனவும், இங்கிருந்து நெல், தேங்காய் என்பவை ஏற்றுமதி செய்யப்பட ஒரு காலம் இருந்ததெனவும், எனினும் காலத்தின் மாற்றம் இன்றய நெருக்குவார நிலையை தோற்றுவித்துள்ளது, நம் ஒவ்வொருவருக்கும் இந்த பொருளாதார சிக்கல் நிலையிலுந்து மீண்டெழக்கூடிய பலம் தேவை எனவும் குறிப்பிடடார்.

தொடர்ந்து பேசுகையில் நீர்வளம் நிலவளம் உள்ள எமது பிரதேசத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கக்கூடிய இளஞர் யுவதிகளை உருவாக்கும் வகையில் இக்கற்கை நெறியானது ஒருங்கிணைந்த பண்ணை தொழில்நுட்பம், புதிய மீன்பிடி பொறிமுறைகள், புதிய தொழில்துறை உருவாக்கம் எனும் பல பாடவிதானங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதெனவும் வெறுமனே அறிவு சார்ந்ததாக அல்லாமல் திறன் மற்றும் நேர்மறையான மனப்பாங்கு விருத்தி என்பவற்றை அடிப்படையாக கொண்டதெனவும் குறிப்பிடடார்.

பல்கலைக்கழகத்தின் சமூகம் சார் சிந்தனையுடன் உருவாக்கப்படுள்ள இக்கற்கைநெறியானது NVQ மட்டம் 4 மற்றும் SLQA மட்டம் 3 இக்கு சமானது. தொடர் பட்டபடிப்புவரை இட்டுச்செல்லும் வகையிலான கட்டமைப்பு, இக்கற்கைநெறியில் ஈடுபடும் மாணவர்களிற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாகும்.