கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பெடிக்கும், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கனடா மார்க்கம் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ். மாநகர முதல்வர், ஃபிராங்க் ஸ்கார்பெடியிடம் பல கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

யாழ்.மாநகர முதல்வரின் கோரிக்கைகள்

இதற்கமைய, “இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள்.

அவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மதிப்பளித்து, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் அமைந்தது. அதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினை பெற்றுக்கொள்ளுவதற்கும் நீங்கள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

விசேட அழைப்பு

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட தமிழ் மக்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் நலிவடையச் செய்துள்ளது.

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான தென் ஆசியாவின் சிறந்த பொது நூலகம் எரியூட்டப்பட்டமை யாழ். மாநகர சபை கட்டிடம் முற்றாக தகர்க்கப்பட்டு்ளளது.

இவ்வாறு நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களை கட்டியெழுப்புதற்கு தாங்கள் உதவ வேண்டும்.

அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகீர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பெடினை யாழ்ப்பாணத்திற்கு வருமாறு யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.