பா. அரியநேந்திரன்

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 யூன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், 1990, ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த படையினரும்,இஸ்லாமிய ஊர்காவல்படையும் இணைந்து 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

இன்று 32, ஆண்டுகள் கடந்தும் அந்த இனப்படுகொலைக்கான நீதி இன்னும் இல்லை..! ஆண்டுகள் கடந்தாலும் ஆகுதியான எம் உறவுகளின் நினைவு எமை விட்டு அகலாது..!

வீரமுனைப்படுகொலையைப்போல் வடக்கு கிழக்கில் உள்ள பல கிராமங்களில் பல இனப்படுகொலைகள் இடம்பெற்றும் ஆண்டுகள் கடந்தும் அத்தனை படுகொலைகளுக்கும் எந்த நீதியும் இதுவரை இல்லை என்பதே உண்மை.!

கடவுளின் தீர்பாவது கிடையாதா..?

எம்மவர் உடல்களின் குருதியால் ஈழமண் சிவந்தது.!
ஒன்றல்ல இரண்டல்ல இலட்சோப இலட்சஉயிர்கள்.!
என்னென்று சொல்லுவது இனப்படு கொலை பட்டியலை.!
ஐ நாவிடமும் சொன்னோம் அனைத்துலகிலும் சொன்னோம்.!
காலம்தான் கடக்கிறது நீதியோ இன்னும் இல்லை.!
கண்ணீரை சிந்தியும் கவலையில் அழுதிட்டாலும்.!
கடவுளின் தீர்பேனும் கிடைக்காதா ஏங்குகினோம்.!

-பா.அரியநேத்திரன்-