போசணைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பின்னர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்தே உருவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.

உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள்

மிக மோசமான விலை உயர்வு, பயிர் விளைச்சல் குறைதல், உக்ரைன் போர் மற்றும் முக்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த இலங்கை அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறை என்பன உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஆதரவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் அண்மைய மதிப்பீட்டின்படி இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பணவீக்கத்துடன் போராடும் இலங்கை

இலட்சக்கணக்கான குடும்பங்கள் அரிசி போன்ற முக்கிய உணவுப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாத வகையில் 90 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் இலங்கை போராடி வருகிறது.

எனவே அவசர தலையீடு இல்லாமல் 22 மில்லியன் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் திட்டங்கள் இன்னும் முழுமைப் பெறாமலேயே உள்ளன என்றும் சித்தீக் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நாட்டில் எரிபொருள் இல்லாததால் சுமார் 200,000 கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சிறு விவசாயிகளும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.