மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.