பாறுக் ஷிஹான்
கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் சனிக்கிழமை (4) இடம்பெற்றது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லி கிராம் உட்பட சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம் ,வங்கி அட்டைகள் ,சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் சான்றுப்பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது நடவடிக்கை
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அதிகாலை 3 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை மையப்படுத்தி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.
இதன் போது குறித்த வீட்டின் அருகில் இருந்து திடீரென கார் ஒன்றில் இருவர் தப்பி சென்றதுடன் தப்பிச் சென்றவர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரத்திச் சென்றனர்.இவ்வாறு துரத்திச் சென்ற போது மற்றொரு சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் தப்பி சென்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.இதனை அவதானித்த அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் தரப்பினர் அச்சந்தேக நபரை கைது செய்ததுடன் தப்பி சென்ற காரை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மறித்து தடுத்து நிறுத்தினர்.
இதன் போது மங்காத்தா திரைப்பட பாணியில் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பி சென்ற காரை தலைக்கவசத்தினால் எறிந்து தடுத்து நிறுத்தி காரில் இருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை இரகசிய தகவலுக்கமைய ஏற்கனவே சோதனை மேற்கொண்ட வீட்டில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் வருகை தருவதற்கு முன்னர் சுமார் கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் பல பகுதிகளிலும் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்த இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு தரப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
பாராட்டுக்குரிய கூட்டு நடவடிக்கை
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்(SDIG) சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG ) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் (IP) ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த மாதமும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கருகாமையில் கடவுளின் பிள்ளை என அழைக்கப்படும் 23 வயதுடைய பெண் சந்தேக நபரும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இக்கைது நடவடிக்கையினால் அந்த ஊர் மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.















