செல்லையா பேரின்பராசா.

பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் -2026  இருநூற்று ஐம்பத்து ஆறு  புள்ளிகளைப் பெற்று (256 புள்ளிகள்) இவ்வாண்டும் மட் /பட்/களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடத்தினைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.

இதற்கான வெற்றிக் கிண்ணத்தை இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அதிதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த மெய்லல்லுனர் திறனாய்வு போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் செட்டிபாளையம் பொது விளையாட்டு மைதானத்தில் ஜனா கருணாகரன் அரங்கில்  சனிக்கிழமை ( 06.06.2026 ) பிற்பகல்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வர்த்தக, வாணிப,  உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆர்.நெடுஞ்செழியன் பிரதம அதிதியாகவும்,  கிழக்கு மாகாண மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரும் கிழக்குப் பல்கலைக் கழக பேரவை உறுப்பினருமான என்.விமல்ராஜ் கௌரவ அதிதியாகவும்,  ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளரும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய அறங்காவல் சபைத் தலைவருமான க.பாஸ்கரன் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தனர். 

இந்த போட்டி முடிவுகளின் பிரகாரம் களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) 256 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் 177 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும்,  பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை)  164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும்,  செட்டிபாளையம் மகாவித்தியாலயம் 138 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தினையும்,  மண்டூர் 14 சக்தி மகாவித்தியாலயம் 62 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தினையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.