( வி.ரி.சகாதேவராஜா)
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில், மொனராகலை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அக் கூட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சமூக அமைப்பினர் உள்ளிட்ட சிலர் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். எனினும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பான திகதி குறித்து இவர்களது கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லையென தெரியவருகிறது.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பின்வரும் முக்கிய நிகழ்வுகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டன.
முக்கிய திகதிகள் விபரம்:
காட்டுப்பாதை திறப்பு: 2026.07.10 வெள்ளி
காட்டுப்பாதை மூடல்: 2026.07.25 சனி
கந்தனின் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்: 2026.07.15 புதன்
கந்தனின் தீர்தோற்சவம்: 2026.07.30 வியாழக்கிழமை
15 நாட்கள் மட்டுமே காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறந்திருக்கும்.
கதிர்காமம் செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் இந்த திகதிகளை குறித்து வைத்துக்கொள்ளுவது நல்லது.
வருடாந்தம் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை அடியார்கள் காட்டுப் பாதையில் செல்வது வழமை.
பாதை திறப்பு முதல் நாளிலே சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை இறங்குவார்கள்.
பழைய காலத்தில் 10 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட காட்டுப் பாதை அண்மைய வருடங்களில் கொடியேற்றத்துக்கு முன் குறைந்தது 6 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த வருடம் 5 நாட்களாக மாற்றம் பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் கவலையளிக்கிறது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம் வெகுவிரைவில் நடைபெறவிருக்கிறது. அக் கூட்டத்தில் இத் திகதி மாற்றம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



