கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “பச்சை கட்டல்” எனப்படும் மரபுச் சடங்கு காணப்படுகிறது.
பச்சை கட்டல் என்பது பொதுவாக கண்ணகி அம்மன் சடங்கு நாட்களில் இடம்பெறும் ஒரு நேர்த்தி மற்றும் பகிர்வு சார்ந்த சடங்காகும்.
மேலும், பச்சைக் கட்டல் நிகழ்வு என்பது குறிப்பாக காரைதீவு கண்ணகையம்மன் ஆலயத்தில் சிறப்பாக 5 நாட்களும் மேற்கொள்ளப்படுகின்றது .மேலும் இந்த நடைமுறை 90வீதமான அம்மன் ஆலயங்களில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வில் அரிசிச்சோறு வேறாகவும் பலவகை மரக்கறிகள், கீரைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் சேர்த்து வேறாகவும் தயாரிக்கப்படுகின்றன. சில இடங்களில் இது “குழைசாதம்” போன்ற வடிவில் கலக்கப்பட்ட உணவாக அமையும்.
பின்னர் இந்த உணவு அம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
காரைதீவில் புதன் தொடக்கம் ஞாயிறு வரை ஐந்து நாட்களும் ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் வழங்கப்படும்.
“பச்சை” என்ற சொல்லுக்கு இங்கு இயற்கை, சுத்தம், வளம் மற்றும் உயிர்மை என்ற அடையாளங்கள் உள்ளன. மரக்கறிகள், கீரைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த சடங்கு உடல்நலனும் ஆன்மீகத் தூய்மையும் இணைந்த வழிபாட்டு முறையாகக் கருதப்படுகிறது.
பச்சை கட்டல் நிகழ்வு வெறும் உணவு வழங்கல் அல்ல. அது சமத்துவத்தையும் சமூகப் பகிர்வையும் வலியுறுத்தும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.

சாதி, சமயம், ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ,செல்வம், வயது என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே உணவை பகிர்ந்து உண்பது, சமூக ஒற்றுமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இது “அம்மன் அருள் அனைவருக்கும் சமம்” என்ற உணர்வை மக்களிடையே உருவாக்குகின்றது.
இந்த சடங்கில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
அதிகாலை முதலே மரக்கறிகள் வெட்டுதல், சோறு சமைத்தல், உணவை ஒன்றாகக் கலத்தல் போன்ற பணிகளில் கிராமப் பெண்கள் ஒன்றிணைந்து ஈடுபடுவது பாரம்பரியக் கிராமிய வாழ்க்கையின் அழகை வெளிப்படுத்துகின்றது.
இளம் தலைமுறையினருக்கும் இந்த மரபு தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரிமாறப்பட்டு வருகின்றது.
மேலும், பச்சை கட்டல் நிகழ்வு நேர்த்திக்கடன் நிறைவேற்றலுடனும் தொடர்புடையதாக உள்ளது. நோய் நீக்கம், குடும்ப நலன், விளைச்சல் பெருக்கு, மழை வேண்டுதல் போன்ற பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் இந்த சடங்கை நடத்துகின்றனர். சிலர் ஆண்டுதோறும் குடும்பமாக இணைந்து பச்சை கட்டல் செய்து அம்மனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இன்றைய வேகமான உலகிலும் இவ்வாறான பாரம்பரிய சடங்குகள் மக்களை ஒன்றிணைக்கும் ஆன்மீக மற்றும் சமூகப் பாலமாகத் திகழ்கின்றன.
கண்ணகி அம்மன் சடங்கில் இடம்பெறும் பச்சை கட்டல் என்பது பக்தி, பகிர்வு, ஒற்றுமை மற்றும் தமிழர் வாழ்வியலின் ஆழமான பண்பாட்டு அடையாளமாகும்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
