மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள்!
( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலையில் 04 தமிழ் மாணவர்கள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
முன்னொருபோதுமில்லாத வகையில், இம்முறை மாவட்டத்தில் முதலிடத்தை நான்கு தமிழ் மாணவர்கள் பெற்றுத் தெரிவானது சாதனையாக கருதப்படுகிறது.
உயிரியல் விஞ்ஞான துறையில் செல்வன். ரமேஷ் தேட்சித்( அக்கரைப்பற்று), பௌதீக விஞ்ஞான துறையில் செல்வன். ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந்( கல்முனை), பொறியியல் தொழில்நுட்ப துறையில் செல்வன். பிரபாகரன் ஹரிநர்த்தனன்( மண்டூர்) மற்றும் கலைத் துறையில் செல்வி.பத்மநாதன் வைஷ்ணவி
(பெரியநீலாவணை) ஆகியோரே முதலிடம் பெற்று, மீண்டும் தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட வரலாற்றில் முதல் தடவையாக நான்கு தமிழ் மாணவர்கள் நான்கு துறைகளில் முதனிலையில் தெரிவானதையிட்டு,
கல்முனை நெற் ஊடக வலையமைப்பு இன்று (4) சனிக்கிழமை மாலை கல்முனை தலைமையகத்தில் கௌரவிப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பணிப்பாளர் புவி.கேதீஸ் தெரிவித்தார்.
