பாறுக் ஷிஹான்

பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சிறு  பதற்றமான சூழல் நிலவியது.

பேருந்து கட்டணங்களை உயர்த்த கோரி  அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில்   தனியார் பேருந்து சேவையில் இருந்து விலகியுள்ளது. குறுகிய தூர மற்றும் நீண்ட தூர சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளதுடன் இடையிடையே மக்களின் நலன் கருதி சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.

மேலும் அம்பாறையில் இருந்து கொழும்பு, கண்டி, அனுராதபுரம் மற்றும் கேகாலை உள்ளிட்ட அனைத்து தூர இடங்களுக்கான சேவைகளும், குறுகிய தூர போக்குவரத்து சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஏனைய பேருந்துகள் சேவையில் ஈடுபடாத வேளையில், அம்பாறையில் இருந்து மாத்தறை நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்படுவதற்கு தயாராகியுள்ளது. இதன்போது அங்கு நின்ற ஏனைய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்  குறித்த பேருந்தை வழிமறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்காமல் பேருந்தை இயக்க முற்பட்டதாக கூறி, மாத்தறை பேருந்தின் சாரதியை  தாக்க முற்பட்டதால் அந்த இடத்தில்   அமைதியற்ற சூழல் உருவானது.

 பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக  வந்த  அம்பாறை  தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

தற்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு  நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறித்த பணிப் புறக்கணிப்பினை தனியார் பேருந்து தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.