சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஒரு தமிழ் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், ஐரோப்பாவின் இதயப்பகுதியான சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார். 2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்மட்ட சந்திப்பும் கலந்துரையாடலும் இந்தப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சுக் (Zug) நகரில் இராணுவத்தின் மிக உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இதில்:

• சுவிஸ் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பெனடிக்ட் ரூஸ் (Lt Gen Benedikt Roos)

• கூட்டாட்சி கவுன்சிலர் மார்ட்டின் பிஃபிஸ்டர்

ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். தற்போதைய உலகப் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சுவிஸ் இராணுவத்தின் தயார்நிலை குறித்து விவாதிக்கப்பட்ட இந்த முக்கிய அமர்வில், ஒரு தமிழராக அபிராம் அவர்கள் முன்னிலை வகித்தது உலகத் தமிழர்களுக்குப் பெருமிதத்தை அளித்துள்ளது.

“திறமையும் அர்ப்பணிப்பும் இருந்தால் எந்தவொரு உயரிய இலக்கையும் அடைய முடியும் என்பதற்கு மருத்துவர் அபிராம் அவர்களின் இந்த வெற்றி ஒரு சிறந்த உதாரணம்.”

தமிழர் அடையாளம் உலக அரங்கில்

இராணுவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவத் துறையில் சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாடு வழங்கும் இந்த அங்கீகாரம், இளைய தலைமுறை தமிழர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. ஒரு ஈழத்தமிழ் மருத்துவர் சுவிஸ் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பாதுகாப்புக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல.

அனைத்து தமிழர்கள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் மென்மேலும் பல சிகரங்களை தொடவும் ஆசிகளும்.

fb – சுவிஸ் தமிழர் தகவல் மையம்