வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு
பாறுக் ஷிஹான்-
வெற்றுக்காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இன்று (6) மீட்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடி படையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பான இக்கைக்கண்டு கடந்த காலங்களில் இப்பகுதியில் நடமாடிய விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அண்மையில் இக்காணி உழவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மழை காரணமாக புதைந்திருந்த இக்கைக்குண்டு நிலத்தில் மேல் தெரிந்துள்ளது.
இந்நிலையில் அக்காணி வழியாக பாடசாலைக்கு தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் இனங்கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.
அத்துடன் அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த சவளக்கடை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று மேலதிக விசாரணைகளை சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையிலான பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



