( வி.ரி.சகாதேவராஜா)
கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள்,தவிசாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது தொடர்பில் அவருடைய நடவடிக்கையில் எனக்கும் அதிருப்தி இருக்கிறது.
இவ்வாறு நேற்று நடந்த நாவிதன்வெளி பிரதேசசபையின் மாதாந்தக் கூட்டத்தின் போது பதிலுரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேசசபையின் மாதாந்தக் கூட்டம் (04 வது சபை அமர்வு) நேற்று ( 2025.10.14), செவ்வாய்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் உப தவிசாளர் புவனரூபன் மற்றும் சகல உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.
இந்த அமர்வின்போது பிரதேச சபை மு.கா. உறுப்பினர் எம்.பி.நிவாஸினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆதம்பாபா எம்.பி கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
இது தொடர்பாக
நாவிதன்வெளி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.வி.நிவாஸின் பிரேரணையின் போது அரச காணியை அடாத்தாக தனியார் அபகரித்து வருவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை சபையில் ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது உடனடியாக தீர்த்து தருவதாக கூறி கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளை தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி உடனடியாக தீர்வை பெற்று தருவதாக தெரிவித்தார் . ஆனால் இது தொடர்பாக நான் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் செயலாளரிடம் வினவியபோது எங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களும் எமக்கு கிடைக்கவில்லை என கைவிரித்ததாக குறிப்பிட்டார் . இதிலிருந்து நாம் புரிந்து கொண்ட விடயம் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா வெறுமனே சொல் வீரரே தவிர செயற்பாடுகளில் பூச்சியமே என பிரதேச சபை உறுப்பினர் எம்.பி நிவாஸ் தெரிவித்தார்.
எம்.பி நிவாஸ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட சாளம்பைக்கேணி-01 இல் அமைந்துள்ள வண்ணாத்தி குளத்தை அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்து தரக் கோரிய பிரேரணை ஆராயப்பட்டது. இங்கு கருத்து வெளியிட்ட உறுப்பினர் எம்.பி நிவாஸ் இந்த வண்ணாத்தி குளத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாட்களில் இந்த குளம் இருந்த இடமே இல்லாமல் அழிந்துவிடும். விவசாயிகளின் நன்மைகருதி இந்த விடயத்தில் கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் இது விடயமாக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிலும் பேசியதாகவும் நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஏ.ஆதம்பாபா எம்.பி இதுவரை அதை செய்ய முன்வரவில்லை என்றும். அவர் செயலில் எதையும் செய்வதாக இல்லை. சொல்வதை செய்யும் பழக்கமில்லாத ஒருவராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் ஏ.ஆதம்பாபா எம்.பி கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள்,தவிசாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாகவும் அவருடைய நடவடிக்கையில் தனக்கும் அதிருப்தி உள்ளதாகவும் குறிப்பிட்டு இந்த குளம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தனது காட்டமான கருத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் முன்னாள் தவிசாளர் அமரதாஸ ஆனந்த, ஏ. நளீர் போன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போதும் ஏ.ஆதம்பாபா எம்.பி தொடர்பில் தனது அதிருப்தியை பதிவு செய்தார்கள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் தொடர்பான சபையின் ஆட்சேபனையின் போது தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது
காணி அதிகாரம் சபைக்கு இல்லாததால் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளை நாடி செய்துகொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் சொறிக்கல்முனை பொது மயான விடயம், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள், வறிய குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் விடயம், வீதி அபிவிருத்தி விடயங்கள், வடிகான் அமைத்தல், பாலர் பாடசாலை மேம்பாடு, மாடு அறுக்கும் மடுவத்திற்கு மின்சாரம் பெறுதல், பேருந்து தரிப்பிடங்களை புனர்நிர்மானம் செய்தல், அறிவித்தல் பலகை வைப்பது, வடிகானுக்கு முடி இடுதல், பெயர்ப் பலகை நிர்மாணித்தல், இடர் கடன் வழங்குதல், தேசிய வாசிப்பு மாத நிகழ்வினை நடத்துவதற்கான உத்தேச செலவு அறிக்கை, மூன்று மாத கால உள்ளக பயிற்சியினை மேற்கொள்வதற்கான அனுமதி போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு சபை தீர்மானங்களை எடுத்தது.




