கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்,  மாவட்டத்தின் A தர கழகங்களுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்  கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.அப்துல் மனாப் தலைமையில் (06) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.ரி.எம்.ராபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். 12 அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு கல்முனை சனிமவுண்ட் விளையாட்டு கழகமும் பிர்லியன் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 01:00 என்ற கோல் வித்தியாசத்தில் பிர்லியன் அணி வெற்றி பெற்று சம்பியன் அணியாக தெரிவாகியது. சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபா 30,000 பணப்பரிசு வெற்றிக்கிண்ணம் என்பன  அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கல்முனை சனிமவுண்ட் அணிக்கு ரூபா 20,000 ரூபா பணப்பரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மருதமுனை கோல்ட்மைன்ட்  விளையாட்டு கழகத்தினருக்கு ரூபா 10,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான வை. கே.றஹ்மான், பொருளாளர் ஏ.எம்.நவாஸ், சுற்றுப்போட்டி குழு தவிசாளரும் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியருமான எம்.பி.எம். றஸீட், லீக்கின் முகாமையாளர் எஸ்.எம். கான், உப பொருளாளரும் மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் பிரதித் தலைவருமான யூ.எஸ்.சபீல் உட்பட விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த இறுதிப் போட்டிக்கு  காத்தான்குடியை சேர்ந்த இம்சாத் அலி பிரதம நடுவராக கடமையாற்றியதோடு, மேலதிக நடுவர்களாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் உப தலைவர் ஆசிரியர் எஸ்.எம். அஸீம் மற்றும் எம்.என்.எம்.சபா ஆகியோர் கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.