வாகரை, பனிச்சங்கேணியில் கருவப்பஞ்சோலை குளத்தில் நீராடச் சென்ற 2 சிறுமிகளும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பனிச்சங்கேணியைச் சேர்ந்த க.சானுஜன் வயது (12) க.டிக்ஷன் வயது (10) ஜெ.ருக்ஷானா வயது (10) ஆகிய மூன்று மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் பணிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களாகும். உயிரிழந்த மூவரும் குளத்தின் கரையோரத்தில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் காணப்பட்ட பாரிய குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கோடை காலமானதால் குளத்தில் நீர் மட்டம் குறைந்து காணப்படுவது வழக்கமாகும்.
இக்காலங்களில் குளத்தில் மீன் மீடித் தொழில் ஈடுபடுபவர்கள் சிலர் தங்களது குடும்ப சகிதம் அப் பகுதிக்கு சென்று தங்கி நின்று இரவு பகலாக மீன் பிடித் தொழில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். இவ்வாறான நிலையிலேயே இச் சம்பவம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் உடற்கூற்றாய்வு பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
