நாவிதன்வெளியில் தமிழரசுடன் சுயேட்சை இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடு! சுமந்திரன் – ரூபன் சந்திப்பு !
( வி.ரி. சகாதேவராஜா)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி உடன் இணைந்து ஆட்சி அமைக்க , அங்கு போட்டியிட்ட சுயேட்சைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம் .ஏ. சுமந்திரன் தலைவர் சி வி கே . சிவஞானம் இரா.சாணக்கியன் உள்ளிட்ட குழுவினருடன் சுயேட்சை குழு தலைவர் கு.புவனரூபன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் .
குறித்த பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.
ஆட்சி அமைக்க தாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ரூபன் இணக்கம் தெரிவித்தார் .
அதன்படி நாவிதன்வெளி பிரதேச சபையின் சபைத் தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சி கட்சியின் உறுப்பினர் இ. ரூபசாந்தன் மற்றும் உபதவிசாளராக சுயேட்சை குழுவின் தலைவர் கு. புவனரூபன் தெரிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழு வட்டாரங்கள் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபையில் 13 பேர் உறுப்பினராக இருப்பர்.
சுயேட்சை அணி போட்டியிட்டு 2125 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

