பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்!
கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் தேதி நடத்தவேண்டும் . மேலும் இப் பொதுக் கூட்டத்திற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் அது தொடர்பான அறிவிப்புகளை சகலருக்கும் வழங்க வேண்டும்.
கல்முனை மாவட்ட நீதிபதி ஏ .எம். எம் .றியாழ் இந்த இணக்கத் தீர்ப்பை வழங்கினார் .
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய நிர்வாகம் தொடர்பான வழக்கு கடந்த வாரம்(14) நீதிபதி எ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இ.மதனகாந் உள்ளிட்ட 11 மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி நதீர் சட்டத்தரணி மிப்றா ஆகியோர் ஆஜரானார்கள்.
அம்பாறை அரசாங்க அதிபர் ,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் சு.சுரேஸ், சி.ஈஸ்பரன் ஆகிய பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி ஏ. ஆர். எம் கலீல் ,சட்டத்தரணி பாத்திமா உடன் சட்டத்தரணி அப்பாஸ், அரசதரப்பு சட்டத்தரணி பிரஷாந்தனுடன் சட்டத்தரணி ராசிமும் தெரிபட்டார்கள்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகள் ஆகியோர் இந்த வழக்கினது பிணக்கினை சில நிபந்தனைகளின் பிரகாரம் சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள இருப்பதாக மன்றுக்கு தெரிவித்தார்கள் .
அதனையடுத்து நீதிபதி றியாழ் இணக்கத் தீர்ப்பை வழங்கினார்.
அதாவது..
தற்சமயம் குறித்த ஆலயத்தின் பரிபாலன சபையாக செயல்பட்டு வருகின்ற சபையானது ஆலயம் தொடர்பான பொதுக்கூட்டத்தினை 14 .6 .2025 ஆம் தேதி நடத்துவது என்றும், இப்பொதுக் கூட்டத்திற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் அது தொடர்பான அறிவிப்புகளை சகலருக்கும் வழங்குவது எனவும் இணக்கம் காணப்பட்டது .
இந்த பொதுக்கூட்டமானது அந்த ஆலயமானது அமைந்துள்ள பகுதிக்கு பொறுப்பாக உள்ள பிரதேச செயலாளரின் அல்லது குறித்த பிரதேச செயலகத்தை சேர்ந்த கலாச்சார உத்தியோகத்தரின் மேற்பார்வையில் அல்லது கண்காணிப்பின் கீழ் நடத்துவது எனவும் இணக்கம் காணப்பட்டது .
மேலும் கல்முனை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் அவர்களும் குறித்த தினத்தில் அவ்விடத்தில் பிரசன்னம் ஆகி இருக்க வேண்டும் என்றும் அவர் அங்கு நடைபெற்ற கூட்டம் தொடர்பிலான அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது .
இதற்கமைய செயற்படவேண்டும் எனவும் அறிக்கை இடப்படவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த தவணை 25. 6. 2025 ஆம் தேதி இடம்பெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.