அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு  வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

வி.ரி. சகாதேவராஜாபாறுக் ஷிஹான்

இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற  தேர்தல்  நாளை இடம்பெறவுள்ள  நிலையில்  தேர்தலுக்காக அம்பாறை  மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான  அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில்   இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று   ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில்  உள்ளுராட்சி மன்ற   தேர்தலுக்காக  19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக    4,78000  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்..2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற  தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும்.பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள்  குறித்து  உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார். தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும்.பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.


 இதேவேளை  தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.

அம்பாறை  மாவட்டத்தில்  தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான  சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.வாக்களிப்பு நிலையத்தில்   காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது என  மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான   சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார் .

இதே வேளை  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வாக்குச் சாவடிப் பொறுப்பதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஓரளவுக்கு கண்பார்வை மங்கிய அல்லது கண்பார்வையற்ற நபர்கள் தங்கள் வாக்குகளை சுயமாக செலுத்தும் வகையில் வாக்குச்சீட்டின் மீது தொட்டுணரக்கூடிய ஸ்டென்சில் சட்டகம் ஒன்றைப் பயன்படுத்தும் வசதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் போன்ற கருவிகளின் துணையுடன் வரும் நபர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் இலகுவாகப் பிரவேசிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் வருகை தரும் நபர்கள் மற்றும் உயரம் குறைந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் வாக்குப் பெட்டியை குறைவான உயரத்தில் வைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பார்வைக்குறைபாடு கொண்டவர்கள் கண்ணாடி அல்லது லென்ஸ் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பினால் அதற்கும் வசதி செய்து கொடுக்குமாறும் குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையானது வாக்களிப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளும் படியும் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் கட்டாயமாக வருகைதர வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக சுமார் 3,000 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் மே 7 ஆம் திகதி வரை நாட்டலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும், பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபீடங்களும் இன்றும் நாளையும் மூடப்படும் என்று மேல் மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வாகனத்திற்கான வாகன வருமான அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் மேற்படி திகதிகளில் காலாவதியாகிவிட்டால், தாமதக் கட்டணமின்றி கடமை தொடங்கும் முதல் நாளில் அனுமதிப்பத்திர கட்டணத்தை மாத்திரம் செலுத்தி குறித்த வாகனத்திற்கான வருமான அனுமதிப்பத்திரத்தை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகமும் இன்றும் நாளையும் மூடப்பட உள்ளது.

கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படுவதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.