எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழமையை விட அதிக வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை தாக்கம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் சுமார் 1.6 பாகை செல்சியஸாகவும், ஓகஸ்ட் மாத இறுதியில் 2.6 பாகை செல்சியஸாகவும் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் விளைவாக, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வளி வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன், செப்டெம்பர் மாதம் வரை வறண்ட காலநிலை நீடிக்கும் நிலையில், ஒக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும், நவம்பர் மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தக்கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த காலநிலை மாற்றம் காரணமாக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், குறிப்பாக காலபோக (பெரும்போக) நெல் சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வலியுறுத்தியுள்ளார்.