( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (18) திங்கள் கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் மற்றும் 

வைத்தியசாலை குழுவினர் வரவேற்று கலந்துரையாடினர்.

பின்னர், வெளிநோயாளர் பிரிவு, நோயாளிகள் பல்வேறு வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவு, உயர் கவனிப்பு பிரிவு , சமையலறை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்குள்ள சேவைகள் மற்றும் நோயாளர்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இவ்விஜயத்தின் போது , பணிப்பாளர் சுகுணன் வைத்தியசாலையில் சமகாலத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதார சேவைகள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து பூரண விளக்கமளித்தார்.

விஜயத்தின்போது, கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர்,வைத்தியசாலை குழுவின் சார்பில் அதன் தவிசாளர் சந்திரசேகரம் ராஜன், பிரதி தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா, பொருளாளர் இ.ரூபசாந்தன், உறுப்பினர் எஸ்.கதிரமலை மற்றும் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பிரமுகர்களும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், நோயாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர், மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.