தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் வருகையால், திமுக–அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் திகதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கூறுகின்றன.

சில கணிப்புகள் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.

ஆனால், காமாக்யா நிறுவனம் வெளியிட்ட எக்சிட் போல் கணிப்புகள் வேறுபட்ட படம் காட்டுகின்றன.

அதன்படி: திமுக கூட்டணி: 78–95 இடங்கள் அதிமுக கூட்டணி: 68–84 இடங்கள் தவெக: 67–81 இடங்கள் இந்த கணிப்புகள் மூன்று முக்கிய அணிகளுக்கும் பெரும்பான்மை (118 இடங்கள்) எட்டாத நிலையை சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை எண்களைப் பெறாதபோது அது ‘தொங்கு சட்டசபை’ எனப்படும். தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலை இதுவரை நேரடியாக உருவாகவில்லை.

அப்படியான சூழல் அமைந்தால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை கூட்டணி அமைக்க தவெக ஒப்புக்கொள்ளவில்லை எனில், வெளியில் இருந்து அதிமுகவிற்கு மைனாரிட்டி ஆதரவு அளிக்கவும் வாய்ப்புள்ளது.

பெரும்பான்மை பலத்தோடு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வரவில்லை எனில், தொங்கு சட்டசபை ஏற்படும்.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றால் தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அதன் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.