நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,
பிராந்தியத்திற்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலையான விநியோகம் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான போதியளவு எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
தற்போதைய மேலதிக எரிவாயு இருப்புக்கள் மாலைதீவில் உள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் விரைவில் மாலைதீவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே அளவு (33,000 மெட்ரிக் தொன்) எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், எந்தவித இடையூறுமின்றி விநியோகத்தைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்

