சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் அவலநிலை
( வி.ரி.சகாதேவராஜா)
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது.
குறித்த வீரமுனை ஆண்டியர் சந்தி அம்பாறை – காரைதீவு பிரதான வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அச்சந்தியில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட வீரமுனை ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுச் சந்தி (Roundabout) கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த (03) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, வர்த்தமானியின் மூலம் “அபிவிருத்திப் பிரதேசமாக” பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும், குறித்த பிரதேசத்திற்குரிய உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் ஆனால் அப்படி அனுமதி பெறப்படவில்லை என்பது சபையின் வாதமாக இருக்கிறது.
இந்நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்அனுமதியின்றி பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளுடன் ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுச் சந்தி உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் சட்டமுரணானவை எனக் குறிப்பிட்டு, அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஏப்ரல் மாதம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.



