( காரைதீவு நிருபர் சகா)

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar) ஏற்பாட்டில் பூண்டுலோயாவில் நாளை 07 ஆம் திகதி சனிக்கிழமை நிறுவப்படவிருக்கிறது.

இச் சிலைகள் மத்திய மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிலே பூண்டுலோயா விவேகானந்த மகாவித்தியாலயத்தில், எதிர்வரும் நாளை ஏழாம் திகதி அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோர் சிலைகளை திறந்து வைக்கவுள்ளனர்.

ஒஸ்கார் சார்பில் தாயக இணைப்பாளர் ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா நட்சத்திர அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்விற்கு உதவி ஒத்தாசை புரிந்த ஒஸ்கார் உறுப்பினர்கள் பாடசாலை நிருவாகம் தாயக இணைப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றிகள் என தலைவர் கந்தசாமி பத்மநாதன்
தெரிவித்தார்.

மத்திய மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் திறந்து வைக்கப்படும் இருபெரும் துறவியரின் முதலாவது திருவுருவச்சிலைகள் இவையென்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில் ” ஒஸ்காரின் துறவியர் படிவமலர்” எனும் சிலை திறப்பு விழா மலர் வெளியிடப்படவுள்ளது .
மேலும், ஒஸ்கார் தலைவர் க.பத்மநாதன் அவர்களின் அனுசரணையில், பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு புதிய வஸ்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும் கலந்து கொள்வோருக்கு அன்னதானம் வழங்கவும் ஒஸ்கார் ஏற்பாடு செய்துள்ளது.