நாளை சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் பங்குபற்றும் வேலோடுமலை வேள்வி யாகம்!

சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ ஏற்பாடு 

( வி.ரி.சகாதேவராஜா)

சாதனைத்தமிழன் நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பிஎஸ்.பாலமுருகன் பங்குபற்றும் 210 சித்தர்களை வரவழைக்கும் வேலோடுமலை வேள்வி யாகம் நாளை (20) செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மூலிகைக் குளியலுடன் நடைபெறவிருக்கிறது.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

 இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில் இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களை பூஜிக்க நாளை செவ்வாய்க்கிழமை (20/01/2026) அன்று இரவு வேள்வி யாகம் இடம்பெறவிருக்கிறது. 

அங்கு இம்முறை உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் குழுவினரும்  சித்தர்களின் குரல் அன்பர்களுடன் பயணிக்கின்றனர்.

நாளை செவ்வாய்க்கிழமை மாலை மூலிகை குளியலுடன் ஆரம்பமாகி, 18 சித்தர்கள் சந்நிதியில் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, வேல் பூஜை மற்றும் இரவு முழுவதும் “தபஸ்” என்னும் உயர்ந்த ஆழ்நிலை தியானங்களை செய்து சித்தர்களின் அருளை பெற  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று வேலோடுமலை தேவஸ்தான பீடாதிபதி தியாகராஜ சுவாமிகள் 

தெரிவித்தார்.

 சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், போசகர் சிவாயநம மகேஸ்வரன் சுவாமிகள், சித்தர்களின் குரல் ஆஸ்தான ஊடகவியலாளர் விபுலமாமணி சகாதேவராஜா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் மிக மிகச்சிறப்பாக இந் நிகழ்வு நடைபெறவிருப்பதாக தியாகராஜ சுவாமிகள் மேலும் தெரிவித்தார்