நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட பல விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும், ஜனவரியில் ஆரம்பிக்க முடியும் என இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

“அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி பதவி ஏற்று, அதன் பின்னர் அவரது அரசும் அதிகாரத்துக்கு வந்து, ஒரு வருடத்தின் பின்னர்தான் இப்போது இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.

அரசினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாகக் கூறிய விடயம் புதிய அரசமைப்பு ஒன்று வரும் என்பதாகும். அது விரைவாக, துரிதமாக நடைமுறைக்கு வரும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் ஒரு வருடமாகியும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காடப்பட்டது.

அவர் அடுத்த ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பார் என எங்களுக்கு உறுதி வழங்கியிருக்கிறார் எனவும் தமிழரசு கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவை ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் உறுதி கொடுத்திருந்தார் என்பதையும் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியது.

அந்த உறுதிமொழியில் ஐம்பது வீதம் நடைமுறைப்படுத்தி விட்டோம், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி விட்டோம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எங்களுக்கு இன்னும் சொற்ப காலம் தேவைப்படுவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் நடத்துவோம் என்ற உறுதிமொழியையும் அவர் தந்தார். எனினும் எப்போது என அவர் சொல்லவில்லை.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறித்து எடுக்கப்படக்கூடாது, பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்கள் பற்றி எல்லாம் எடுத்துரைத்தோம்.

எங்கள் மாவட்டங்களிலேயே ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பிரச்சினைகள் பற்றி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்,தங்கள் மாவட்ட விடயங்களை எடுத்துரைத்தார்கள். அந்த விடயங்களை எல்லாம் அவர் செவிமடுத்தார். எங்களோடு பேசினார். முக்கியமான பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற முறையில் தொடர்ந்து இந்த விடயங்களை எங்களுடன் கலந்துரையாடி முன்னெடுப்பார் என அவர் உறுதியளித்திருக்கின்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம்

திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரத்தையும் மற்றும் பல இடாங்களில் சிலை வைப்பு, காணி அபகரிப்பு, காணி விடுவிப்பு என பல விடயங்கள் பேசப்பட்டதாகவும் தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.