( வி.ரி. சகாதேவராஜா)

நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று  (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு  விஜயம் செய்தார் .

அதன் போது பாடசாலைச் சமூகத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு அமோக வரவேற்பு அளித்தனர். 

பிரதமருடன் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின்  பட்டிருப்பு தொகுதிக்கான அமைப்பாளர் வாணி ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர்.

பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரனும் சமூகமளித்திருந்தார்.

 இதன்போது பாடசாலையின் தமிழ் இனியம் வாத்தியக் குழு மாணவர்கள் வாத்திய இசையுடன் நடனமாடி பிரதமரையும் ஏனைய அதிகளையும் வரவேற்றுச் சென்றனர். 

பாடசாலையின் முதல்வர் எம்.சபேஸ்குமாரின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

அவரது தலைமையுரையின் போது, இப்பாடசாலையின் நூற்றாண்டு வரலாற்றில் பிரதமர் ஒருவர் வருகைதந்தது இதுவே முதற்தடவை எனக்குறிப்பிட்ட அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் சாதனைகள் பற்றி எடுத்துரைத்ததுடன் இச்சாதனைகள் யாவும் பல்வேறு பெளதீகவளப் பற்றாக்குறைகளின்

மத்தியிலேயே நிகழ்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக சுமார் 3000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 200 மாணவர்கள்மட்டுமே அமரக்கூடிய ஒரு ஒன்றுகூடல் மண்டபமே உள்ளதாக சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் பாடசாலையின் ஆசிரியையால் பாடசாலை பற்றிய தகவல்களும்  காட்சிப்டுத்தி தெளிவுபடுத்தப்பட்டது.

பிரதமர் தனது உரையின் போது, பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இயன்றவரையில் தாம் கருத்தில் கொள்வதாகவும் குறிப்பிட்டதுடன், தற்போதைய கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அந்தவகையில் தற்போது அமுல்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது அதிபரால் பிரதமருக்கு ஞாபகச்சின்னம் வழங்கப்பட்டதுன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்  சங்கத்தினராலும் பிரதமருக்கு ஞாபகச் சின்னம் வழங்கப்பட்டது.

 அத்துடன் 11 ஆம் வகுப்பு மாணவி செல்வி சுரேஸ் கனிஷேகா  பிரதமரின் உருவத்தை பென்சில் வர்ணத்தினால் வரைந்த ஓவியத்தையும்  பிரதமருக்கு வழங்கியிருந்தார். மாணவியை வாழ்த்திய  பிரதமர் நன்றியும் கூறினார். 

நிகழ்வின் இறுதியில்  அதிபர், ஆசிரியர்கள் மற்றும் இனியம் வாத்தியக்குழு மாணவர்கள் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.