கோட்டைக்கல்லாற்றில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா 

( வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமையில் கோட்டை கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான பண்பாட்டு ஊர்வலமானது ஊர் வீதிகளுடாக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தை அடைந்ததும், பிரதேச செயலாளர் அவர்களினால் சுவாமி விபுலானந்தரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்தல் மற்றும் பூசை நிகழ்வுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் சுவாமி விபுலாநந்தர் தொடர்பான கதாப்பிரசங்கம், பேச்சு, பாடல், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டது.  

 மேலும் கதாபிரசங்கம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.