சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை  நாளை (01.08.2025) 

சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை 01ஆம் திகதி  வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள  சித்தானைக்குட்டி மடாலயத்தில் நாளை 74ஆவது குருபூஜை வழமைபோல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

“‘சித்தத்தில் உறைந்தவராம் சித்தானைக்குட்டி எங்கள் சித்தமெல்லாம் நிறைந்தவராம் சித்தானைக்குட்டி.”

 இவ்வாறு பக்தர்களால் அன்போடு பக்தியோடு நம்பிக்கையோடு பாடித்துதிக்கப்படும் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு  நாளை 74ஆவது குருபூஜை.

 கோமாதா பூஜை திருவிளக்கு பூஜை நடைபெற்று பின்னர் நடைபெறும் குருபூஜையில் நாவலப்பிட்டி தொடக்கம் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழமையாகும்.

குரு பூஜை நிறைவடைந்த பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவது மற்றும் ஒரு சிறப்பம்சமாகும்.

மாலையில் கல்விச் சாதனையாளர்கள் கௌயவிக்கப்படுவார்கள். தொடர்ந்து விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

இது இந்த ஆலய கலாசாரமாகும்.

சுவாமி  கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவில் 1951 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 21 ஆம் நாள் சுவாதி நட்சத்திர தினத்தன்று ஜீவ சமாதியானார்.

பாரத நாட்டின் இராமநாதபுரத்து சிற்றரசன் மகனாக அவதரித்த இம்மாபெரும் சித்தர் ஆடிய சித்துக்கள் எண்ணிலடங்கா.

கதிர்காம திருவிழா காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த இம்மகான் கதிர்காம காட்டில் வழிதப்பியவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். மேலும் சாண்டோ சங்கரதாசை பெரும் இரும்பரசனாக புகழ் பூக்கச் செய்தவரும் சித்தானைக்குட்டிசுவாமிகளே!

இவர் ஆடிய சித்துக்களில் குறிப்பிடத்தக்கவை:

 ஊமையை பேசவைத்தார். மாண்டபெண்ணை உயிர்ப்பித்தார். கடலில் அகப்பட்டவனை மீட்டார் மாட்டிறைச்சி மல்லிகைப் பூஆக்கினார். கடலின் மேலால் நடந்தார்.ஒரு முறை கல்முனை சந்தியில் நின்று கதிர்காமத்தில்

தீப்பிடித்த திரை சேலையை அணைத்தார். அறுத்த மீனை பலாச் சுளையாக மாற்றினார்.

இவர் ஆடிய சித்துக்கள் இன்னும் பல பல…

காரைதீவு 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட போது

சித்தானைக்குட்டி சமாதி கோயில் மட்டும் தப்பியது மிக மிக அற்புதமானதொன்றாகும். ஜீவ சமாதி அடைந்த இந்த மகான் இன்றும் அவரை சரணடைந்தவர்களை எத்தனையோ ஆபத்தானசூழ்நிலைகளில் இருந்து காத்து வருகின்றார் என பக்தர்களிடம் இருந்து பல்வேறு அனுபவங்களை கேள்விப்படுகின்றோம்.

2011ம் ஆண்டு சுவாமியின் 60 வது குருபூசை தினத்தில் ஐம்பொன்னாலான சித்தர் சிலை, பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் இராஐ்குமார் சுவாமி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

என்பது குறிப்பிடத்தக்கது.

 “ஆதியந்த மொன்றுமிலா ஐயன் வாழ்க

அருட் சக்தி வாழ்க ஜங்கரனும் வாழ்க

சோதி வடிவேல் வாழ்க தூயோர் வாழ்க 

தொண்டர்ரெலாம் துயரின்றி வாழ்க வாழ்க 

பூதலத்தில் மக்களெல்லாம் ஓர் தாய் பெற்ற 

புத்திரர் போல் ஒருமித்து பொழிந்து வாழ்க 

சாதிமத பேதமில்லா சன்மார்க்கத்தை தந்த 

சித்தர் சித்தானைக்குட்டி வாழ்க வாழ்கவே.”

(சித்தர்துதி)

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜாகாரைதீவு   நிருபர்