காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு !
தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு.
( வி.ரி.சகாதேவராஜா)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பிரபல சமூக செயற்பாட்டாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை தெரிவு செய்ய அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளைச் செயலாளர் கதிராமத்தம்பி செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைக்குழு உறுப்பினர்கள், துணை வேட்பாளர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை அழைத்து கலந்துரையாடல் கூட்டங்களை நடாத்தினோம்.
மற்றும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் இடம் கருத்து ஆலோசனை கேட்டோம். 90வீதமானவர்கள் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை தவிசாளராக தெரிவு செய்ய அமோக ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
காரைதீவு வேட்பாளர்கள் நால்வரும் அந்தந்த வட்டாரங்களில் பெற்ற வாக்குகள் இறங்கு வரிசைப்படி முறையே கி.ஜெயசிறில்- 1101(80%) வை.கோபிகாந்- 980(69.04%) சி.சிவகுமார்- 812(48.02%) சு.பாஸ்கரன்- 786( 70.05%) ஆகும்.
அதன்படி, காரைதீவு பிரதேசத்தில் ஆகக்கூடிய 1101 வாக்குகளை பெற்ற தமிழினப் பற்றாளர் நல்ல அனுபவசாலி சமூக செயற்பாட்டாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை நியமிக்க பலரும் தங்களது பரிபூரண ஆதரவைத் தெரிவித்தார்கள்.
இதனை கட்சியின் பொதுச் செயலாளர் எம் ஏ. சுமந்திரன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் ( பொத்துவில் தொகுதி தலைவர்),முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ( சம்மாந்துறை தொகுதி தலைவர் ),சட்டத்தரணி நிதான்சன் -(கல்முனை தொகுதி தலைவர்) ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
மேலும் , அவர் தலைமையில் இடம்பெற்ற பிரதேசக் கிளைக் குழு கூட்டங்கள் தொடர்பாகவும் அவர் விளக்கமாக கூறினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் காரைதீவு கிளை குழுக்கூட்டம் கடந்த 27.05.2025 அன்று இரவு 7 மணி அளவில் எனது(செயலாளர் கதிர். செல்வபிரகாஷ்ஷின்) இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் அழைப்புகள் விடுக்கப்பட்ட 20 அங்கத்தவர்களில்
க. செல்வபிரகாஷ்
எல்.ஏ.ரமேஷ்குமார்
ரி. மோகனதாஸ்
எஸ். ஜெயராணி
பி. செல்வவாணி
என். ஜெயந்த்
க. மதனன்
எஸ். ராஜேந்திரன்
ஜி. தங்கவடிவேல்
வி. சிறிதரன்
வை.கிஷோக்குமார். ஆகிய 11 பேர் சமூகமளித்து இருந்தனர் .
ஒவ்வொருவர் கருத்தையும் சுருக்கமாக வினவியபோது ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில்
உறுப்பினர் கி.ஜெயசிறில் தவிசாளராக தெரிவாக வேண்டும் என
மோகனதாஸ் ஜெயராணி
ஜெயந்த்
ராஜேந்திரன்
கிஷோக்குமார்
தங்கவடிவேல் ஆகியோர் ஆதரவுக்கருத்து கூறினார்கள்.
உறுப்பினர் சி.சிவகுமார் சார்பாக
சிறிதரன்
செல்வவாணி ஆதரவு தெரிவித்தனர்.
உறுப்பினர்.கோபிகாந்த் சார்பாக மதனன் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்.
மேலும் நடுநிலைமையாக
ரமேஷ்குமார்
செல்வப்பிரகாஷ் (செயலாளர்) ஆகியோர் நடுநிலையான கருத்து கூறினார்கள் .
அதன் படி வட்டார கிளையின் 20 பேரில் 11 பேர் சமூகம் அளித்ததோடு அவர்களில் ஜெயசிறில் தவிசாளர் ஆக தெரிவு செய்யப்பட வேண்டுமென ஆறு பேரும் ,சிவகுமார் தவிசாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என இரண்டு பேரும் கோபிகாந் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஒருவரும் நடுநிலையாக இருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
காரைதீவு கிளையின் உப தவிசாளர் கே. தட்சணாமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொள்ளாவிடினும் தனது கடிதத்தை திரு.கே.ஜெயசிறிலுக்கு தனது பூரண ஆதரவை சிபார்சை வழங்குவதாக அறிவித்து எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 28.05.2025 அன்று புதன்கிழமை இரவு 7 மணி அளவில் இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட துணை வேட்பாளர்களை அழைத்து தவிசாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
அவர்களில் தவிசாளர் பதவிக்கு ஜெயசிறில் பொருத்தமானவர் என
சசிகுமார்
புவனேந்திரன்
யோகேஸ்வரி
அமலா
சிவாகரன்
கியோகிருஷ்ணா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
யோ.கோபிகாந் சார்பாக சுகுணா சுதர்ஷினி,கேதுஜன் ஆகியோரும் சு.பாஸ்கரன் சார்பாக லோகநாதனும் தங்களது ஆதரவினை வழங்கினர்.
மேற்படி கூட்டம் கலந்துரையாடல் போது கூடிய ஆதரவு ஜெயசிறிலுக்கு உள்ளது என்பதையும் இரண்டாவதாக கோபிகாந்துக்கும் மூன்றாவதாக சிவகுமாருக்கும் நான்காவதாக பாஸ்கரனுக்கும் ஆதரவு காணப்படுகின்றது.
எனவே தவிசாளர் பதவி தொடர்பாக கட்சியின் தலைமைப்பீடம் சிறந்த முடிவினை மேற்கொள்ளுமாறு கிளையின் செயலாளர் என்ற வகையில் வேண்டி நிற்கின்றேன் என செயலாளர் கதிராமத்தம்பி செல்வப்பிரகாஷ் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.






