ஏறாவூர் – வ.சக்திவேல் புன்னைக்குடா வீதியிலுள்ள பல சரக்குக் கடையொன்றின் பலசரக்குகள் களஞ்சிய பகுதி திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (30.03.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாரிய வெடிச் சத்தங்களுடன் தீ பற்றியதால் வீதியிலும் சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீட்டுப் பகுதிகளிலும் கரும்புகை வெளியாகி மக்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் மாடியில் வசித்த பெண்ணும் சிறுவர்களும் உடனடியாக மீட்டுள்ளதுடன், ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் அப்பகுதியினர் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.

தீப்பற்றிக் கொண்ட பட்டாசுகள்

இந்தச் சம்பவத்தில் கடையிலிருந்த சுமார் 10 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பால்மா, அரிசி, சோடா உள்ளிட்ட இன்னும் பல பொருட்கள் தீயில் கருகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடைத் தொகுதியில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் பட்டாசுகளில் பட்டு, உடனடியாக பட்டாசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.