தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது.

அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆறாவது கட்சி

மேலும் தெரிவிக்கையில், “ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது.

ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர்.

ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன்.

புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும்.

அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தன்னிச்சையாக எடுத்தார்கள்.

ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொண்டோம்.

கூட்டணியின் பெயர்

கூட்டணியின் பெயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என கட்சியின் பெயரை தெரிவித்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் கூட்டணியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுத்திருந்தோம். எனினும் சின்னம் அல்லது கட்சி செயலாளர் பதவியையாவது எமது கட்சிக்கு தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததால் நாம் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.

2008 ம் ஆண்டிலே குத்துவிளக்குச் சின்னத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் செயற்படுத்துவதாக தெரிவித்திருந்தனர்.

தமிழரசுக் கட்சி விலகியிருக்கும் தருணம் ஏனைய கட்சிகள் இணைந்துள்ளமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்தும் பயணிப்போம் என்றனர்.

எங்களுடைய கட்சியின் சின்னத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தருணம் அதற்கும் மறுப்பளித்து விட்டனர்.

தேர்தல் காலங்களில் செயலாளர் பதவியே பொறுப்பு வாய்ந்த பதவியாக காணப்படுவதால் அதனை நாம் கோரிய போதும் அதனையும் மறுத்து விட்டனர்.

பொம்மை போல் நடத்த முயற்சி

ஏற்கனவே அனைத்து திட்டங்களையும் நன்கு வகுத்துவிட்டு என்னை அந்தக் கூட்டணியில் பொம்மை போல் நடத்த முயன்றது வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த விடயம் மணிவண்ணனுக்கும் நன்கு தெரிந்த விடயம்.

நேற்றும் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்த நிலையில் நான் நேரில் சென்று அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து பயணிப்பது தொடர்பாக உறுதியளித்திருந்தேன்.

இந்நிலையில் ஜனநாயகப் போராளிகள் பல குழுக்களுடனும் கட்சிகளுடனும் கூட்டு வைத்திருப்பதாக வரும் பல செய்திகளை நான் அறிந்தேன். ஆனால் நான் போராளிகளுக்கு எதிரானவன் இல்லை.

எம் கட்சியிலும் முன்னாள் போராளிகள் பலர் இருக்கின்றனர்.

இவ்வாறான காரணங்களால் தான் நாம் வெளியேறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கட்சியின் சின்னத்தையோ செயலாளர் பதவியையோ தரும் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்க்கின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் நான் தொடர்ந்தும் அவர்களுடன் இணைய எதிர்பார்க்கவில்லை.

எமது கட்சியில் பல இளைஞர்கள் இணைய முன்வந்துள்ளனர்.

ஏனைய கட்சிகள் எம்முடன் இணைய தயாராகும் போது அது தொடர்பில் நன்கு பரிசீலிக்கப்படும்.

உள்ளூராட்சித் தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு உறுதியாக உள்ளோம்.”என தெரிவித்துள்ளார்.