( வி.ரி.சகாதேவராஜா)

கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கிழல் கண்டத்தில் இந்த நிகழ்வு நேற்று முதல் முறையாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.

 விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு செயல் திட்டமாக இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது .

விவசாய குழு பிரதிநிதி இரா.திருநாவுக்கரசு உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பயன்படுத்தும் கிருமிநாசினிகள் ஏனைய இரசாயன பொருட்களின் வெற்றுக் கொள்கலன்களை முறையாக மூன்று வேறு கொள்கலன்களில் இடுவதன் மூலம் சூழலை பாதுகாப்பதுடன் அவற்றை பயன்படுத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது.

பச்சை நிற கொள்கலனில் பொலித்தீன் சார்ந்த கழிவுகளும், சிவப்பு நிற கொள்கலனில் கண்ணாடி சார்ந்த கழிவுகளும், நீல நிற கொள்கலனில் பிளாஸ்டிக் சார்ந்த கழிவுகளும்  போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இச் செயற்திட்டம்  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.