கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைது
பாறுக் ஷிஹான்
நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திருமணமாகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், வீட்டிலிருந்து கடமைக்கு சமுகமளிப்பதற்காக மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியைப் பெறுவதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு, பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 72,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேலேயுள்ள விசாரணைக்கு அமைவாக பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினுள் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

