நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மனிதாபிமான நிவாரண உதவிகள் லுனுகல பிரதேச செயலகத்திற்கு கையளிக்கப்பட்டது
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மனிதாபிமான நிவாரண சேகரிப்பை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டது.
அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.சீந்தத்க அபேவிக்கிரம அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைய பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் ஒன்று சேர்க்கப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள், பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலோடு பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட லுனுகல பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் அலுவலக அனர்த்த நிவாரண செயற்பாட்டு குழுவினரை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், மற்றும் கணக்காளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பதுளை மாவட்டத்தின் லுனுகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கல்லுல்ல, வட்டாவத்த, வெவவத்த, மடுல்சீமை மக்களுக்கு பகிர்தளிப்பதற்காக லுனுகல பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையிலான அனர்த்த நிவாரண முகாமைத்துவ குழுவிடம் (09) மாலை கையளிக்கப்பட்டது.
இதேநேரம் இங்கிருந்து சென்ற அனர்த்த நிவாரண பணியாளர்கள் நேரடியாக மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி நிவாரண பொருட்களையும் கையளித்தனர்.






