இன்று மாலை வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் இன்று (12) அங்கு அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, தீபச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அஞ்சலி வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு,மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஶ்ரீநேசன்,வைத்தியர் இ.ஶ்ரீநாத்,அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஷ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன். நாவிதன்வெளி தவிசாளர், ரூபசாந்தன், . முன்னாள் தவிசாளர் கே. ஜெயசிறில் மற்றும் சட்ட்தரணி அ.நிதான்சன், சமூகசெயற்பாட்டாளர்கள், வீரமுனை மண்ணில் உயிர் நீத்த உறவுகளின் உறவினர்கள் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டு தீபச்சுடர்,மலரஞ்சலி நினைவுவணக்கம் செலுத்தினர்கள்.





















