திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!
( காரைதீவு சகா)
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.
“ஒஸ்கார்” ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் ( ராஜன்) வழிநடத்தலில், அவுஸ்திரேலியாவில் வாழும்”ஒஸ்கார்” அமைப்பின் மூத்த நிர்வாக சபைஉறுப்பினர் பொறியியலாளர் வீரக் குட்டி சத்தியமூர்த்தி( காரைதீவு ) இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கியுள்ளார்.
இந்நிகழ்வு , திராய்க்கேணி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் ( 11) வெள்ளிக்கிழமை அதிபர் ஆர்.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக, ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்த ஒஸ்கார் அமைப்பின் உபதலைவர் அ.மகேந்திரன் செயலாளர் தி.லாவண்யன் பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தி ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
ஒஸ்கார் சார்பில் ஒருங்கிணைப்பாளராக வீ.விவேகானந்தமூர்த்தி செயற்பட்டார்.
நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அருகில் உள்ள முன்பள்ளி பாடசாலை மாணவருக்கும் அதே உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒஸ்கார் அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் கடந்த பல வருடங்களாக செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் வருடம் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் பெருமளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக ஒஸ்கார் தெரிவித்துள்ளது.








