கல்விக்கு வறுமை தடையில்லை! கணபதிபுரத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் மகேந்திரகுமார் !
(வி.ரி.சகாதேவராஜா)
வறுமையைக்காரணங்காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது. உண்மையில் வறுமை கல்விக்கு தடையில்லை என்பது இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
இவ்வாறுபிரதம அதிதியாக கலந்துசிறப்பித்த சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார்.
சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் நேற்று (01) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
விசேட அம்சமாக பலவசதியீனங்களுக்கு மத்தியிலும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய சாந்தகுமார் டர்வின் என்ற மாணவன் பாராட்டப்பட்டு துவிச்சக்கர வண்டி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மல்லிகைத்தீவு அதகபா. அதிபர் ஜதீஸ்வராவின் வேண்டுகோளின்பேரில் பிரான்ஸ்ஸில் வசிக்கும் மது எனும் பரோபகாரி துவிச்சக்கர வண்டியை அன்பளிப்பாக வழங்கினார்.
சம்மாந்துறை வலய முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அங்கு பணிப்பாளர் மகேந்திரகுமார் மேலும் உரையாற்றுகையில்:
இக்கற்றல் ஊக்கிகள் நிச்சயமாக ஏனையோரையும் கல்வியின்பால் ஊக்குவிக்கும் என்பதில் ஜயமில்லை.முதலாம் வருடம்(2015) வரலாற்றில் முதன்முறையாக யுஜிதா என்ற மாணவி சித்தியடைந்து சாதனைபடைத்தார்.அதனைத்தொடர்ந்து வருடாந்தம் இப் பாடசாலையில் புலமைப் பரிசில் சித்தி பெற்ற வண்ணமே உள்ளது.
இம்முறை டர்வின் சித்தி பெற்றுள்ளார்..எனவே இதனை தொடர்ந்து நீங்கள்தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.
மிகவும் பின்தங்கிய பிரதேச இப்பாடசாலை புலமைப்பரிசில் பரீட்சையைப்பொறுத்தவரை எமது வலயத்தில் முதனிலையில் உள்ளது.அதிபர் கிருபைராஜா ஏனைய ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்.என்றார்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா உரையாற்றுகையில்:
கல்வி ஒன்று தான் மாற்றத்திற்கான பெரும் கருவி.நீங்கள் கல்வியில் சிறந்துவிளங்கவேண்டியவர்கள். இதுபோன்ற மிகவும்பின்தங்கிய கிராமங்களில் கல்வியில் சாதனைபடைக்க வேண்டுமென்பதற்காக எமது அவுஸ்திரேலிய ஒஸ்கார் உறவுகள் தலைவர் ராஜன் தலைமையில் உதவியது நீங்கள் மேலும் கல்வியில் சிறந்துவிளங்கவேண்டுமென்பதற்காகவே.
அந்த வகையில் இன்று ஜதீஸ்வரா தயவில் பிரான்ஸ் மது உதவியுள்ளார்.பாராட்டுகள். எமது வலயக்கல்விப் பணிப்பாளர் சம்மாந்துறைக்கு வந்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டது. அவரது அர்ப்பணிப்பான சேவைக்கு சம்மாந்துறை சமூகம் நேற்று அலுவலகம் சென்று பாராட்டியுள்ளமை சிறப்பானது. வாழ்த்துக்கள். என்றார்
விசேட அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான யசீர் அரபாத், எச்.நைரூஸ்கான் ஆசிரியஆலோசகர்களான இசட் எம்.றிஸ்வி , எம்எச். நாசிக் , அதிபர் எஸ்.ஜதீஸ்வரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
துவிச்சக்கரவண்டியைப் பெற்றுக்கொண்ட புலமையாளர் டர்வின் மண்டபத்தினுள் அதனை ஆசையோடு பெருமிதத்தோடு உருட்டிக்கொண்டுசென்றதை பலரும் மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர்.
அதிபர் கிருபைராஜா மற்றும் புலமைப் பரிசில் ஆசிரியை திருமதி கமலநாதனும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.











