மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு இடம்பெற்றது.
RDHS பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக் கருத்தரங்குக்கு தலைமைதாங்கி உரையாற்றிய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்கள்
” பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெறும் காவலர்களாக மட்டுமல்லாமல், நமது சுகாதார துறை நிறுவனங்களின் முகமாகவும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அவர்களின் கடமைகள் வெறும் பாதுகாப்பை உறுதி செய்வதையும், அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும் தாண்டி விரிகின்றன. ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர், தான் பணியாற்றும் இடத்திற்கு வரும் அனைத்துத் தரப்பினரையும் வரவேற்பாளராக அணுக வேண்டும். புன்னகையுடனும், மரியாதையுடனும் அவர்களை அணுகி, அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
அவர்கள், நிறுவனத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதே வேளையில், தகவல்களை வழங்குபவராகவும் செயலாற்ற வேண்டும். குறிப்பாக, வைத்தியசாலைகளில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்ய வேண்டும். நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனும், குழப்பத்துடனும் இருப்பார்கள். இவர்களுக்கு வழிகாட்டுவது, சரியான திசையைச் சுட்டிக்காட்டுவது, அவசரகாலங்களில் தேவையான உதவிகளை வழங்குவது போன்ற செயல்பாடுகள், பாதுகாப்பு உத்தியோகத்தரின் சேவையின் முக்கிய அம்சங்களாகும்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் பன்முகத் திறமையுடன், சேவை மனப்பான்மையுடன், சிறந்த தொடர்பாடல் திறன் கொண்டவராகவும் திகழந்தால், அது வைத்தியசாலைகளின் நற்பெயருக்கும் பங்களிக்கும்.
எனவும் தெரிவித்தார்.
கருத்தரங்கை ஒழுங்கமைத்திருந்த தர முகாமைத்துவப் பிரிவு வைத்திய அதிகாரி Dr. ஜெ. சகாய தர்ஷினி அவர்கள், வைத்தியசாலையினை அணுகும் நோயாளர்களை வரவேற்பது, நோயாளி மற்றும் உறவினர்களுக்கான நல்ல வழிகாட்டியாக நடந்துகொள்வது போன்ற கருத்தை வலியுறுத்திதயதுடன் தொடர்பாடலின் முக்கியத்துவத்தினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
கடமைகள், அவர்களின் தொழில் பற்றிய விபரங்கள், அத்துடன் பாதுகாப்பு காவலாளிகளின் கடமை பற்றிய சுற்றறிக்கை தொடர்பான விளக்கங்களும் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ரி. ரகுராஜா அவர்களால் விரிவான வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








