உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை !
கோடீஸ்வரன் எம்பி.
( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பினுள் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
உகந்தமலை புத்தர் சிலை விவகாரம் ஊடகங்களில் வைரலாக எரிந்து வருகையில், இதுவரை மௌனம் சாதித்து வந்த அந்த மாவட்டத்திற்குரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முதல் தடவையாக வாய்திறந்திருக்கிறார்.
அவரிடம் நேற்று இவ்விவகாரம் பற்றி கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இந்த விடயம் எனக்கு மக்களால் தெரிவிக்கப்பட்டது. இது உணர்வு பூர்வமான விடயம். கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக இதுவரை நான் ஒரு கருத்தும் கூறவில்லை.
இன்று நான் அங்கு நேரடியாக சென்றேன்.
அங்கு ஆலய குருக்கள் முதல் வண்ணக்கர் வரை சந்தித்து கலந்துரையாடினேன்.
விளக்கம் கிடைத்தது. அதாவது குறித்த சிலை உகந்தமலை சூழலில் வைக்கப்படவில்லை என்பது.மாறாக, உகந்தமலைக்கு அப்பால் கடற்கரைச்சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர்சிலை நிறுவப்பட்டு உள்ளது. அது அண்மையில் நிறுவப்படவில்லை. பல மாதங்களுக்கு முன்பே நிறுவப்பட்டது.அப்போது இந்த அறிக்கை வெளியிடும் சமூக செயற்பாட்டாளர்கள் எங்கே? இருந்தார்களோ தெரியாது. நிற்க, அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது என்பதை நேரடியாக அறிந்தேன்.
வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. அச் சூழலில் மீன்வாடிகளும் உள்ளன. பெரும்பான்மையின மீனவர்கள் உள்ளனர்.
ஆனால், இதனை சில ஊடகங்களும் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் சிலரும் முண்டியடித்துக்கொண்டு வழமைபோல் அறிக்கை வெளியிட்டனர். அவ்வளவு தான்.
“உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என்று மக்கள் கோருகின்றனரே? கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று மக்கள் கேட்கின்றனரே?”
இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று எமது ஊடகவியலாளர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு கூறினார்.
உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு முயற்சி செய்தபோது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்தது உண்மைதான்.
அதற்காக அதே மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பதாக கூறுவது பொய்.அபத்தம்
கதிர்காமத்தைப் போல் உகந்தையையும் மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
